என்மேல் விழுந்த மழைத் துளிகள்..(அனுபவக் கட்டுரைகள்)
Tuesday, March 25, 2025
மரீனா இல்யாஸ் ஷாபி-என்மேல் விழுந்த மழைத் துளிகள்..
Friday, March 14, 2025
அஷ்ரபா நூர்தீன் - ஹூருலீன்கள்
கண்ணழகிகளின் கனன்றுகொண்டிருக்கும் கனவுலகம்
அஷ்ரபா நூர்தீனின் கவிதைகள் கனவுலகிலிருந்து அரண்டு வந்து நிஜத்தை
நோக்கி நெருப்புக் கொளுத்தி எறிபவை... ஹூருலீன்களின் கண்களில் எரிமலையை நிரப்பி
எச்சரிக்கும் தன்மையவை. சலிப்படைந்த சொற்களைத் தள்ளி வைத்து விட்டு
எரிசாம்பலிலிருந்து எடுத்துத் தீச்சரம் கோர்ப்பவை.
ஹூருலீன்கள் தொகுதியின், பெரும்பாலான கவிதைகள் அவர் மனதின்
வெப்புசாரங்களின் வெளிப்பாடுகள் எனலாம். அவர் எடுத்தாளும், எறிகணைச் சொற்கள்,அடுத்தடுத்த
பக்கங்களில் ஆண்களைக் கொஞ்சம் சினமுற
வைக்கவே செய்யும். ..அதேசமயம் பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் பேராதரவுக் கரம்
நீட்டி தலைதடவி செல்கின்றன..
அஷ்ரபா, தன் ‘ஆகக் குறைந்த
பட்சம்’ என்ற முதல் கவிதை தொகுதிக்குப்
பின், 12 வருடங்கள் கவிதைக் காடேறிய பின், மௌனத்தவம் கலைத்து ஹூருலீன்கள் என்ற இத்தொகுதியை
அளித்திருக்கிறார். 100 பக்கங்களில் 73 கவிதைகள்
அணிவகுத்து நிற்க, அவற்றின் மத்தியில் ஒரு கவிதைக் கம்பீரத்தோடு நடந்து
வருகிறார்.. தொகுதியை வாசித்துச் செல்லும் போது, வாசகருடன் உரையாடிக் கொண்டே அவரும்,
கூடவே வருவது போல், இயல்பான சொற்களை தேர்ந்தெடுத்து பக்கங்கள் முழுவதும்
தூவியிருக்கிறார்,
ஆதரவற்ற பெண் வர்க்கத்தின் பல்லூழிகாலத் துயர்களையும்,
தவிப்புகளையும், காட்சிப் படுத்தும் தன்மையில்
பல பெண்ணியல்வாதக் கவிஞர்களை விட்டும் வெகுவாக வித்தியாசம் காட்டுகிறார்.
ஹூருலீன்கள் என்ற தலைப்புக் கவிதை நம்முன் வைக்கும் சந்தேகங்கள் புறக்கணிக்க
முடியாதவை. படைத்த இறைவனிடம் தன் முறையீட்டை சமர்ப்பிக்கும் ஒவ்வொரு பந்தியிலும்
ஆற்றாமை தொனிக்கிறது.
‘’ நான் மட்டும் அவன் ஹூருலீனாய்//இம்மை மறுமை இரண்டிலும் இருக்கப்
//பிரியம் கொண்ட போதிலும்//நானும் அவனது ஹூருலீன்தான் எனும்// பன்மைக்குள்
ஒன்றாவதும்// இறைவா உனது கட்டளையின் பிரகாரமே//
மனைவியான பின்//கணவனைத் தவிர எவர் மனத்தும்// நுழைந்தின்பம் தராதவளா
யிருக்க//கற்பை அவனுக்காகவே பாதுகாத்திருக்க// பலவீனப்பட்ட ஆண்கள் மனம்// அழகைக்
கண்டு இவ்வுலகில் அலைபாய்தலும்// ஒன்றுக்கு மேல் துணைவியரை//ஹலாலாக்கிக்
கொள்வதும்// பின்னரும் வீதிகளில்பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளாதிருப்பதும்// அசூயை
ஆன மனதோடு// மனைவியை நெருங்குதலும் // சரிதானா இறைவா?//
இவ்வாறு கவிதை முழுவதும் முறையீடு செய்து கொண்டிருக்கும்
ஒட்டுமொத்தப் பெண்களின் ஒப்பாரிக்கு இறைவனின் பதில்தான் என்ன... கனத்த மனதுடன்
கவிதையின் பக்கங்களைக் கடந்து போனாலும், கவிதையும் அது தந்த வலியும் விட்டுப் போவதாயில்லை.
‘’புனிதம் என்னும் நீர்க்குமிழ்ப் பறவை எத்தனைக் காலம் உடையாமல் ஊர்
சுற்ற முடியும். இவர்களின் புனிதக் குடுவைகள் போலி இல்லறத்திலிருந்து வீசப்பட்டு
வீதிகளில் விழுந்து நொறுங்குகின்றன. விழுந்த வீதியெங்கும் கற்பும் ஒழுக்கமும்
அள்ளிக் குவித்த சாக்கடைப் போல நாற்றமெடுக்கின்றன.’’ என்ற, தமிழக விமர்சகன் மா. சுகுமாரின் வார்த்தைகள்
இவ்விடத்தில் ஞாபகம் வருகின்றன..
என்ன இருந்தாலும், தந்தை, சகோதரன், மகன் என்ற ஆண்பாலுயிர்கள் பெண்கள்
மீது கொண்டிருக்கும் தூய நேசத்தைக் கருத்திற்கொண்டு, அடுத்த நூலிலாவது ஆண்கள் மீது
அன்புப் ‘பாலையூற்று அஷ்ரபா.. கொதிக்கும் எரி குளம்பையல்ல...
ஹூருலீன்கள் தொகுதியின்
ஒவ்வொரு கவிதை பற்றிய விரிவான உரையாடலுக்கு வேறு தளமும் இடமும் தேவை. இன்னொரு சந்தர்ப்பத்தில் முயல்வோம்.
நாமிக் ரீஷ்மானின் அழகிய அட்டைப் பட வடிமைப்புடன், மிக நேர்த்தியான
முறையில் நூலை, மகுடம் வெளியீடாக, ரூ; 600/- என்ற குறைந்த விலையில் கொண்டு வந்திருக்கும்,
நண்பர் மைக்கல் கொலினை எவ்வளவும் பாராட்டலாம். தேவையானோர் 0774338878 உடன் தொடர்புகொள்க..
0
தீரன்
அஷ்ரப் சிகாப்தீன்-கழுதை மனிதன்
அஷ்ரஃப்
சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’
நாடுகளை இணைக்கும் மொழிக்
கயிறு
.......................................................................................................
மொழிபெயர்ப்புக்களினால்
பல அரிய படைப்புக்கள் தமிழில் நமக்குக் கிடைக்கின்றன. ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு, தான் பெயர்க்கும்
படைப்பின் மீதான கவனம், அந்த மொழி மீதான
அறிவு, என்பன இன்றியமையாதன. இன்னும் தன் படைப்பு மொழியின் மீதும் ஆழ்ந்த
நுண்ணறிவும் தேவையாகிறது. முக்கியமாக,
மொழிபெயர்ப்பாளனுக்குள் ஒரு படைப்பாளன்
இருத்தல் வேண்டும்.. இவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொண்டுள்ள நண்பர் அஷ்ரஃப்
சிஹாப்தீனின், மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலான ‘’கழுதை மனிதன்’ ஒன்பது சிறுகதைகளை உள்ளடக்கி, யாத்ரா வெளியீடாக
வந்துள்ளது. ஏற்கனவே, ‘ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்’,
‘பட்டாம்பூச்சிக் கனவுகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல்களை தந்தவர்
அஷ்ரஃப் சிஹாப்தீன்.
இவற்றை எல்லாம், இவர்,
ஆங்கில மொழி வழியாகவே பெயர்த்துள்ளதனால் இவை ஏறக்குறைய மூன்றாவது வடிகட்டல் தன்மையின
என்றாகிறது. மூலமொழியின், நிஜமான நுகர்வுணர்ச்சி இவற்றில் காணக்
கிடைக்காவிட்டாலும், இவற்றை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவரின், உணர்ச்சியை தமிழுக்குக் கடத்துவதில் இம் மொழிபெயர்ப்பாளர் வெற்றி பெற்றுள்ளார்
எனலாம்.
மூலப் படைப்பில்
நடமாடித் திரியும் பாத்திரங்களின் பண்பாட்டுப் பின்புலங்களை அறிந்து கொண்டு அப்பாத்திரத்தின் உரையாடல்களை
தான் பெயர்க்கும் மொழிக்குள் கொணர்தல் என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு சிரமம்
தரும் சவால் ஆகும். இந்தச் சவாலை
இந்நூலாசிரியர், தன் நீண்டகால
எழுத்தனுபவத்தின் மூலம் எதிர்கொண்டு
இலாவகமாக கடந்து சென்றுள்ளார்.
இத்தொகுதியிலுள்ள,
கழுதை வணிகம், பெட்டை நாய், கழுதை மனிதன் என்பன குறிப்பிடத்தக்க திறமையான
தேர்ந்தெடுப்புக்கள் ஆகும். ‘’ஒரேயொரு எதிர்பார்ப்பு’’ என்ற
இலங்கை எழுத்தாளர் புத்ததாச ஹேவகேயின் கதை
நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு மொழிபெயர்ப்பாகும். ஒன்பது கதைகளுமே ஒரு வகையில் வாசக மனங்களை ஈர்க்கும் வகையில் அமைந்தவை.
உலகின் இலக்கியங்கள் யாவும் மொழிபெயர்க்கப்பட்ட
படைப்புகள்வழியாக புதிய வெளிச்சத்தையும் அதன் தாக்கத்தினால் புதிய தடங்களையும்
கண்டிருக்கின்றன. இங்கும், ஈரான்,
ஈராக், பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளின் கதைகளைத் தமிழ்ச் சாரளம் வழியாக நாம்
தரிசித்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.
இந்த சாரளத்தை திறந்து தந்த மொழிபெயர்ப்பாளர் பன்னூலாசிரியர் அஷ்ரஃப்
சிஹாப்தீன் அவர்களை எவ்வளவும் பாராட்டலாம்.
இந்நூலை, தன்
இலக்கியப் பயணத்தில் உந்துதலாகவும்,
உறுதுணையாகவும் நிற்கின்ற, ‘காப்பியக்கோ.ஜின்னாஹ்
ஷரிபுத்தீன், கவிஞர் அல் அஷூமத், கவிஞர் தாஸிம் அகமது, கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோருக்கு சமர்ப்பணம் ஆக்கி தன் விரிவான மனதை
வெளிக்காட்டியுள்ளார் நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.
அழகிய கருத்தாழமிக்க
அட்டைப்படத்துடன், முன்னுரை, அணிந்துரை போன்ற ‘கரைச்சல்கள்’ ஏதுமின்றி, இலகு வாசிப்புக்கு ஏற்ற வடிவில் 97
பக்கங்களுக்கு மட்டுப்படுத்திய அளவில், வெளிவந்துள்ளது ‘கழுதை மனிதன்’. நாடுகளை இணைக்கும் இலக்கியக் கயிறு இது..
நூலாசிரியரின் மொழிபெயர்ப்பு பணிக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்... தொடர்புகளுக்கு,
0777 303 818.